
தமிழகத்தின் அடர்ந்த காடுகள் காணப்படும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண்ணை ஊழியர்கள் பிரசவத்துக்காக அழைத்து சென்ற போது, அவருக்கு பிரசவவலி ஏற்பட்டதால் ஓடும் ஆம்புலன்ஸிலேயே இரட்டைக் குழந்தைகள் அவருக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி அமுதா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அமுதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, கடம்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவப் பணியாளர் பி.தேவராஜ் மற்றும் ஓட்டுநர் கோகுலகண்ணன் ஆகியோர் மிக அடர்ந்த காட்டுப்பகுதியில் 20-கி.மீ தூரம் பயணம் செய்து கர்ப்பிணி அமுதாவை பிரசவத்துக்காக அழைத்துச் சென்றனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் அதிகாலை நேரத்தில் ஆம்புலன்ஸில் வரும்போது அமுதாவுக்கு அதிகமான வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸிலேயே மருத்துவ உதவியாளர் தேவராஜ் பிரசவம் பார்த்துள்ளார். முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த 20 நிமிடத்தில் ஆண் குழந்தை ஒன்றும் சுகப்பிரசவத்தில் பிறந்தது.
இதனையடுத்து, இரு குழந்தைகளுடன் தாய் அமுதாவை கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாதுக்காப்பாக அழைத்து வந்தனர். அங்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் அமுதாவும் அவரது இரு குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர். முதல் பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனை செய்தபோது தாயும் இரு குழந்தைகளும் நலமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் அவரது இரு குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவ உதவியாளார் தேவராஜ் மற்றும் ஓட்டுநர் கோகுலகண்ணன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.