
இந்திய மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ஆம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பாராளுமன்ற எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி பேராதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி, தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என தெறிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக “டெல்லி சலோ” என்ற பெயரில் விவசாயிகள், விவசாயிகள் சங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10-வது நாளாக தொடர்ந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வுகளும் காணப்படவில்லை.
இந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ஆம் தேதி விவசாயிகள் “பாரத் பந்த்” அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பை கோரிள்ளனர். இதற்கு ஏற்கெனவே டி.ஆர்.எஸ். கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் விவசாயிகளின் இந்த புரட்சி போராட்டத்துக்கு பேராதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் ஹேரா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ஆம் தேதி நடத்தும் பாரத் பந்த்திற்கு காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் ஆதரவு தெரிவி்க்கிறது. அன்றைய தினம் நாடுமுழுவதும் மாவட்ட தலைநகரங்கள், மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அவர்கள் உறுதி செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஆதரவாக “டிராக்டர் பேரணி”, “கையெழுத்துப் பேரணி”, “விவசாயிகள் பேரணி” ஆகியவற்றை நடத்தியுள்ளார். விவசாயிகள் படும் வேதனையை ஒட்டுமொத்த உலகமும் கவனித்துக்கொண்டிருக்கிறது. கடும் பனிக்காலத்தில் இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதையும், அவர்களின் கோரிக்கையை அரசு செவிசாய்க்கிறதா என்பதையும் உலகமே கவனித்து கொண்டு இருக்கிறது. (மேலும் அமெரிக்காவின் புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூட இந்திய பாஜக அரசின் இந்த போக்கை விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் , கடந்த ஜூன் மாதமே வேளாண் சட்டத்துக்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு வேகமாகக் கொண்டுவந்தது. ஒட்டுமொத்த தேசமும் கொரோனா தடுப்பில் தீவிரமாக இருந்தபோது, பொருளாதார, சமூக, சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தபோது, அவர்களின் கார்ப்பரேட் நண்பர்களான அதானி மற்றும் அம்பானிகளுக்கு உதவுவதற்காக, இந்த அவசரச் சட்டங்களை கொண்டுவருவதில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டியது.
இந்த அவசரச் சட்டங்களை வேகமாகக் கொண்டுவருதற்கான அவசியம் என்ன, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை இடை நீக்கம் செய்துவிட்டு, இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். மேலும் நாடாளுமன்ற விதிகளைப் பின்பற்றாமல், வேகமாக சட்டத்தை இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஏன் இந்த சட்டம் ஏற்றுவதில் இந்த வேகம்.

உண்மையிலேயே விவசாயிகளின் நலனின் அக்கறை இருந்தால், இந்த மசோதாக்களை கொண்டுவரும் முன்பே அவர்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருக்கும். விவசாயிகளின் நம்பிக்கையைப் இந்த அர்சு பெறவில்லை, அவர்களின் நலன் மீது ஆளும் மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. இந்திய மத்திய அரசுக்கும், கார்ப்பரேட் நண்பர்களுக்கும் இடையிலான சதித்திட்டத்தில் விவசாயிகள் பலியாவதைப் நாம் பார்த்து வருகிறோம்.இதை விவசாயிகளும் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள், இவ்வாறு ஹேரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.