
இந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுவதுமாக தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு எண் 69-ஏ பிரிவின்படி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த (App) செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் அவை முழுவதுமாக தடை செய்யப்படுகின்றன என்று அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்தியாவின் உள்த்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த, இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டே இந்த 43 செயலிகளுக்கு தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வருடம் ஜூன் 29-ஆம் தேதி சீனாவின் 59 (App)செயலிகளுக்கும் மற்றும் செப்டம்பர் 2-ஆம் தேதி 118 செயலிகளுக்கும் இதே சட்டப்பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.