
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி கொரோனா வைரஸ் தொற்று நோய் காலத்தில் தவணை, வட்டி, கடனை திரும்பச் செலுத்த கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் சுய உதவி குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனாவால் நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் மக்களும் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் வங்கிகள் தங்களிடம் கடன்பெற்ற வாடிக்கையாளர்களிடம் கடன் தவணை மற்றும் வட்டியை கேட்க கூடாது, 6 மாதம் கழித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிய கடனுக்கான தவணை தொகையையும், வட்டியையும், செலுத்துமாறு அரசு, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் நெருக்கடி தருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்தவர்காள் கூறுவது, ஊரடங்கால் வேலையின்றி வாழ்வாதாரம் கேள்விக்குறியான இந்த நேரத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்த கட்டாய படுத்துகின்றன. இதனால் தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி, வங்கி கடனை அடைக்கவேண்டி உள்ளது. எனவே இந்த நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தாங்களாகவே முன்வந்து கடனை செலுத்தினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம். மாறாக கடன் தவணையை, வட்டியை உடனடியாகச் செலுத்துமாறு வலுக்கட்டாயம் செய்யக்கூடாது.

இதுதொடர்பாக புகார்கள் வந்தால் அந்நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் தவணையை திரும்பச் செலுத்த 6 மாத அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.